வியாழன், ஆகஸ்ட் 25, 2011

முருங்கை கீரை சூப்

எல்லாவயதினருக்கும் ஏற்றது கீரை வகைகள், அதிலும் முருங்கை கீரை சூப் உடம்புக்கு ரொம்பவும் நல்லது, சின்னக்குழந்தைகள், தாய்ப்பால் தருபவர்கள், கர்ப்பிணிகள், முதியோர், டயட் இருக்கறவங்க எல்லாருக்கும் ஒரு முழு உணவு வகையை சார்ந்தது இந்த சூப்.



தேவையான பொருட்கள் -
முருங்கைக்கீரை - 100 கிராம்
பருப்பு வேகவைத்த தண்ணீர் - ஒரு டம்ளர்
மருந்துப்பொடி - 1 ஸ்பூன்

தாளிக்க :
சின்னவெங்காயம் - பொடியாக நறுக்கியது 2
கறிவேப்பிலை - சிறிது





வறுத்து அரைக்க
கொத்தமல்லி - 2 ஸ்பூன்
மிளகு - ஒரு பெரிய ஸ்பூன்
சீரகம்- ஒரு சின்ன ஸ்பூன்
பூண்டு - 4 பல்
சின்னவெங்காயம் - 4
மிளகாய் வற்றல் - 2
                        கறிவேப்பிலை - கொஞ்சம்


வெறும் வாணலில் கறிவேப்பிலையை வறுக்கவும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மேற்கூறியவற்றை வறுத்து தண்ணீர் விட்டு நைசாக  அரைக்கவும்.


செய்முறை

சூப் செய்யும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சின்னவெங்காயம் போட்டு தாளிக்கவும்,
அதில் அரைத்த விழுதை தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
5 நிமிடத்திற்குப்பிறகு பருப்புத்தண்ணீர் சேர்த்து, மருந்துப்பொடி கலக்கவும். மறுபடியும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சுத்தம் செய்த முருங்கைக்கீரையையும் உப்பும் சேர்த்து ஒரே ஒரு கொதி விடவும்.


கவனிக்க

1.மருந்துப்பொடி என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிலபல மருந்துப்பொருட்களின் கலவை. அதில் திப்பிலி, மிளகு, வால்மிளகு,  பெருஞ்சீரகம், சுக்கு, இன்னும் பல வகையான மருந்துப்பொருட்கள் இருக்கும்.  இது இல்லாமலும் செய்யலாம். ஆனால் இந்த மருந்து பொடியை போடுவதால் சளி, உடல் சோர்வு, தலைசுத்தல், பிரட்டல் போகும்.
2. முருங்கைக்கீரை அதிக நேரம் வேகவைக்கக்கூடாது..