வெள்ளி, டிசம்பர் 16, 2011

வெங்காய பூண்டு புளிக்குழம்பு

புளிக்குழம்புக்கு இணையான ருசியான உணவு எதுவும் இல்லை. சூடான சாதம் அதில் புளிக்குழம்பு கூடவே சின்ன உருளைக்கிழங்கு வறுவல்.. ம்ம்ம் நல்ல காம்பினேசன். கொஞ்சம் கேரட் பச்சடியும் இருந்தா இன்னும் சூப்பர்.

தேவையான பொருட்கள்


சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - அரை கப்
புளி கரைசல் கெட்டியாக கரைத்தது - அரைகப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிள்காய் தூள் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - ரெண்டு ஸ்பூன்
ஒரு துளி பெருங்காயம்




அரைக்க 
தேங்காய் - இரண்டு பெரிய ஸ்பூன்
வெந்தயம் - சிறிது

தாளிக்க 
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
சீரகம் - ஒரு சிட்டிகை
வரமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்


 


புளி கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும், மி.தூள், ம.தூள், கொ.மல்லிதூள். பெருங்காயம் உப்பு போட்டு இன்னொரு கொதி விடவும்


 


இப்போது குழம்பு சிறிது கெட்டிப்பட்டதும் தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.





குறிப்பு

தாளிக்க சன்ஃபளவர் ஆயிலை விட நல்லெண்ணெய் நல்லது

தேங்காய் தேவைப்பட்டால் போடலாம். அளவு குறைவாக வேண்டும் எனில் தேங்காய் தேவையில்லை. முடிந்தவரை தவிர்க்கலாம்.

வெந்தயம் போட்டு தாளித்தால் மட்டுமே புளிக்குழம்பின் மணம் வரும்.

மண்சட்டியில் செய்வதால் இரண்டு நாட்களுக்கு கூட ஃப்ரிட்ஜில் வைக்காமல் வைத்துக்கொள்ளலாம்.
 

ஹேப்பி குக்கிங்




ஞாயிறு, டிசம்பர் 11, 2011

தந்தூரி சிக்கன்

வீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்ய ஈசியான ரெசிபி இது. ரொம்ப நாளா குட்டிஸுக்கு தந்தூரி சிக்கன், இல்லனா கபாப் செய்து கொடுக்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன். நான்ஸ்டிக் தவாவில் பனீர் கபாப் செய்வேன். ஆனால் சிக்கன் அப்படி செய்ய முடியாதே. தந்தூரி சிக்கன் ரொம்ப ஈசிதான். டேஸ்ட் நல்லா இருந்ததுன்னு பப்பு சொன்னா :) (பப்புவே சொன்னான்னு இருக்கனும்:)) )

தேவையான பொருட்கள்:

சிக்கன் பீஸ் - 8
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கெட்டிதயிர் - அரைக்கப்
இஞ்சிபூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லிதூள் - ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


பொடிக்க
சீரகம் - ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை (கஸூரி மேத்தி) ஒரு ஸ்பூன்


இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்
செய்முறை


சிக்கனை கழுவி சுத்தம் செய்து, ஒரு சில இடங்களில் கத்தியில் கீறி  வைக்கவும்

ஒரு ஸ்பூன் மிள்காய் பொடி, உப்பு, ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் விட்டு பேஸ்ட் போல செய்து சிக்கனில் கீறல் போட்ட இடங்களில் தடவி வைக்கவும்


 

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிர், மி.தூள், உப்பு, இஞ்சிபூண்டு விழுது, கொ,மல்லிதூள், ம.தூள், பொடித்த சீரக,மிளகு, வெந்தய இலைதூள் போட்டு நன்கு கலந்து வைக்கவும்


 


மிளகாய்தூளில் ஊறிய சிக்கனை பத்து நிமிடங்கள் கழித்து எடுத்து இந்த தயிர் பேஸ்டில் சிக்கனை போட்டு நன்கு கலந்து கடைசியாக ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து  குறைந்தது அரைமணி நேரம் ஊற வைக்கவும்

.
 


அவனில் ட்ரேயில் ஒரு கேரட்டை துண்டு போட்டு அடுக்கி அதன் மேல் சிக்கனை அடுக்கவும்






200 டிகிரியில் 20 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.

திரும்ப எடுத்து க்ரில்லில் வைத்து மேலும் 20 நிமிடங்கள் அதே அளவில் வைக்கவும். இப்போது சிக்கன் வெந்திருக்கும்,




எனினும் மறுபடியும் சிக்கனை திருப்பி போட்டு கொஞ்சம் லெமன் ஜூஸை எல்லா சிக்கனிலும் படுமாறு தடவி மீண்டும் 20 நிமிடங்கள் வைக்கவுன்., இவ்வாறு செய்வதால் மசாலா எல்லா இடங்களிலும் சீராக பிடிக்கும், சிக்கனும் சந்தேகமில்லாமல் வெந்திருக்கும். கொஞ்சம் மொறுமொறுப்பும் வாசனையும அதிகரிக்கும்.


 

குறிப்பு

இதற்கு சிக்கன் லெக் பீஸ் நன்றாக இருக்கும்,. ஆனால் இன்னைக்கு அது கிடைக்காததால் இதில் ட்ரை பண்ணினேன்.

தயிர் கெட்டியாக இல்லாவிட்டால் மொறுமொறுப்பு வராது.  மசாலாவும் சிக்கனில் நன்கு சேராது

தேவைப்படுபவர்கள் ஆரஞ்சு கலர் பொடி போட்டுக்கொள்ளவும். முடிந்த வரை அதை தவிர்க்கலாம்

கேரட் வெட்டி வைப்பதால் சிக்கனில் இருந்து வரும் அதிகபட்ச தண்ணீரை கேரட் இழுத்துக்கொள்ளும். அதனால் சீக்கிரம் ட்ரை சிக்கன் வேகும்.


 ஹேப்பி குக்கிங் :)






வெள்ளி, டிசம்பர் 09, 2011

சிக்கன் லாலிபாப்

குழந்தைகளுக்கு பிடித்தது எப்பவுமே மொறுமொறுப்பான எண்ணெயில் பொரித்த உணவுகள் தான். அது சைவமானாலும் அசைவமானாலும். சிக்கன் லாலிபாப் இரண்டு வகையில் செய்யலாம்.  

தேவையான பொருட்கள்
லாலிபாப் - 4
மக்கா சோள மாவு - 200கிராம் 
தயிர் ஒரு பெரிய ஸ்பூன் - கெட்டியான புளிக்காத தயிர்
இஞ்சிபூண்டு விழுது
முட்டை - 2
எலுமிச்சம்பழ ஜூஸ் - ஒரு பெரிய ஸ்பூன்
மிளகாய் தூள்
ஒரு சிட்டிகை ம.தூள்
உப்பு


 



செய்முறை

சிக்கன் லாலிபாப்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்
ஒரு பெரிய பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்து அதனுடன், தயிர், இஞ்சிபூண்டு விழுது, மி.தூள், ம.தூள், உப்பு லெமன் ஜூஸ் எல்லாம் சேர்த்து கலந்து வைக்கவும்




அதில் லாலிபாப் போட்டு நன்றாக இந்தகலவையை தடவி குறைந்தது அரைமணி நேரம் வைக்கவும்.


 




ஊறிய லாலிபாப்பை மக்கா சோள மாவில் புரட்டி எடுக்கவும்





வாணலில் எண்ணெய் காயவைத்து ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்
.
அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் மிதமான தீயில் வைத்து பொறிக்கவும்.





குறிப்பு 

லாலிபாப் இல்லாவிட்டால் விங்ஸிலும் செய்யலாம்

அதிக சூட்டில் பொறித்தால் மேல்பகுதி கருகியும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

இதையே இன்னொரு முறையில் சோளமாவுக்கு பதில் ப்ரெட் தூளில் புரட்டி எடுத்து பொறிக்கலாம்.  

சோளமாவை விட ப்ரெட் தூளின் மொறுமொறுப்பு அதிகம். லேசான இனிப்பு சுவையை தரும்.



வியாழன், டிசம்பர் 08, 2011

ஸ்பெஷல் ஸ்டஃப்ட் கத்திரிக்காய்

உருளைக்கிழங்குக்கு அடுத்த படி அதிகம் பயன்படும் காய் கத்திரிதான். பவானி கத்திரிக்காய் கடைசல், பொரியலுக்கு நன்றாக இருக்கும். விதை அதிகம் இருக்காது. பெரிய சைஸ் வயலட் நிற கத்திரி சுட்டு புளி விட்டு பிசைந்த கூட்டு செய்யவும். பிஞ்சு கத்திரி புளிக்குழம்புகளுக்கும், நீளக்கத்திரி பஜ்ஜிக்கும் நன்றாக இருக்கும்.


தேவையான பொருட்கள்

மீடியம் சைஸ் கத்திரிக்காய் - 10
பொரியல் பொடி - 3 ஸ்பூன்
கொத்தமல்லிதூள் - 2 ஸ்பூன்
வறுத்த தேங்காய் - 3 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு தேவையான அளவு
புளித்தண்ணீர் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்






அரைக்க :

தேங்காய், கொத்தமல்லித்தூள், பொரியல் பொடி, ம.தூள், பெருங்காயம், உப்பு இவற்றை புளித்தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்



தாளிக்க:
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
 
செய்முறை
கத்திரிக்காயை காம்பு பகுதி மட்டும் நறுக்கி 6 பகுதிகளாக பிளந்து கொள்ளவும்.

அரைத்த மசாலாவை கத்திரிக்காயின் உட்புறம் ஸ்டஃப் செய்து கால்மணி நேரம் வைக்கவும்


ஒரு வாணலில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்

ஸ்டஃப் செய்த கத்திரிகாய்களை போட்டு நன்றாக வதக்கவும்

சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து சிறிய தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

நடுவில் லேசாக கிளறிவிடவும்

ஸ்டஃப் செய்த மசாலா வெளியில் கொஞ்சம் வந்திருக்கும், எனவே வெந்த காய்களை சிறிது ஆறவிட்டு மசாலாவை மீண்டும் கத்திரிக்காய்க்குள் வைத்து ஒரே சீராக அடுக்கி மீண்டும் ஒரு முறை 2 நிமிடம் சிறிய தீயில் வைக்கவும்.

குறிப்பு. 
புளித்தண்ணீரில் வேகவைப்பதால் கத்திரிக்காய் விரைவில் வேகும்.

சிறிய தீயில் வேகவைக்காவிட்டால் தீய்ந்துவிடும்.

பொரியல்பொடி என்பது பொட்டுக்கடலை, கொத்தமல்லி, மிளகு,சீரகம்.மிள்காய் கறிவேப்பிலை சேர்ந்த பொடி, இது இல்லாவிட்டால் மிளகாய்தூளும் கொத்தமல்லிதூளுமே போதும்


முடிந்தவரை இது போன்ற சமையலுக்கு நான்ஸ்டிக் உபயோகப்படுத்தாமல் இரும்பு வாணலி உபயோகிக்கவும்.

ஹேப்பி குக்கிங் :)

வெள்ளி, டிசம்பர் 02, 2011

மசாலா ஆம்லெட்/ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

தானா சமைத்து வீணாக்காமல் சாப்பிடும் மக்களுக்கு இந்த ஆம்லெட். 

தேவையான பொருட்கள்

வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரைகப்
தக்காளி பொடியாக நறுக்கியது - கால் கப்
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை மிகப்பொடியாக நறுக்கியது.
முட்டை - 3
மிளகு பொடி - ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு


செய்முறை

முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து
நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்





ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது
எண்ணெய் தடவி முட்டையை ஒரு
லேயர் ஊற்றவும்




அதன் மேல் வெங்காயம், தக்காளி,உருளைக்கிழங்கு, மல்லித்தழைம்
சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல்  இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.

 

மிக சன்னமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்




மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
பொன்னிற ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி



குறிப்பு

இந்த ஆம்லெட் ஒரு ஃபுல் மீல் வகையை சார்ந்தது. அப்படின்னா இதுக்கு முன்னாடி பின்னாடி எதுவும் சாப்பிட தேவையில்லைன்னு அர்த்தம்.

துண்டுகளாக கட் பண்ணி  ப்ரெட் ஆம்லெட் செய்யலாம்

மூடி வைப்பதாலும் சன்னமான தீயில் வேகவைப்பதாலும் முட்டை நன்கு வெந்தும் உருளைகிழங்கு மிருதுவாகவும் இருக்கும்


  
ஹேப்பி குக்கிங் :)

செவ்வாய், நவம்பர் 29, 2011

வெங்காய சமோசா / பப்ஸ்

பப்ஸ் என்று பொதுவில் சொல்லப்படும் வெங்காய சமோசா எல்லாருக்கும் பிடித்த சிற்றுண்டி. இதில் நடுவில் வைக்கப்படும் பூரணம்./ஸ்டஃபிங் உங்கள் விருப்பபடி  மாற்றிக்கொள்ளலாம்.

மேல் மாவுக்கு தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் ஒரு பெரிய டேபிள் ஸ்பூன்

சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறிது கெட்டியாக மாவு பிசைந்து குறைந்தது அரைமணி நேரம் மூடிவைக்கவும்.

ஸ்டஃபிங்
பெரிய வெங்காயம் -6 -மிகப்பொடியாக நறுக்கியது
எலுமிச்சம்பழ ஜூஸ் - ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்
கரம்மசாலாதூள்- அரை ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லிதழை- பொடியாக நறுக்கியது
இவை அனைத்தும் பச்சையாக கலந்து வைக்கவும். வெங்காயம் வதக்க தேவையில்லை.



சமோசா செய்முறை


1. மைதா மாவு ஒரு ஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பசை போல 
  கலந்து வைக்கவும்

2. மேல்மாவை சிறிது எடுத்து மிக மெல்லிய சப்பாத்தியாக இட்டு அடுப்பில் மிக லேசாக சூடு பண்ணவும். வேக வைக்க வேண்டாம். லேசாக சூடுபடுத்தினால் அதை மடிப்பது சுலபமாகும், ஒன்றோடு ஒன்று ஒட்டாது.








3.ஒரு சப்பாத்தியை இரண்டாக வெட்டி முனையை சுற்றிலும் மைதா பேஸ்ட் தடவவும், அதை ஒரு முனையில் இருந்து சுற்றினால் முக்கோன வடிவம் வரும்





4.உள்ளே வெங்காய மசாலாவை வைத்து மைதா பேஸ்ட் தடவி மடிக்கவும்.





5.எல்லா சமோசாவும் தயார் செய்த பிறகு எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்







குறிப்பு

1.எண்ணெய் அதிக சூடாக இருக்க கூடாது, அப்படி இருந்தால் சமோசா கருகி விடும், உள்ளே இருக்கும் வெங்காயம் வதங்காது




2.ஒரு முறை பொரித்து எடுத்த பின் மறுபடியும் 5 நிமிடம் கழித்து  மறுபடியும் பொரித்தால் அழகான பொன் நிறத்தில் இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும்.

3.ஸ்டப் செய்ய உருளைகிழங்கு, கேரட், பட்டாணி எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.


 ஹேப்பி குக்கிங் :)






வியாழன், ஆகஸ்ட் 25, 2011

முருங்கை கீரை சூப்

எல்லாவயதினருக்கும் ஏற்றது கீரை வகைகள், அதிலும் முருங்கை கீரை சூப் உடம்புக்கு ரொம்பவும் நல்லது, சின்னக்குழந்தைகள், தாய்ப்பால் தருபவர்கள், கர்ப்பிணிகள், முதியோர், டயட் இருக்கறவங்க எல்லாருக்கும் ஒரு முழு உணவு வகையை சார்ந்தது இந்த சூப்.



தேவையான பொருட்கள் -
முருங்கைக்கீரை - 100 கிராம்
பருப்பு வேகவைத்த தண்ணீர் - ஒரு டம்ளர்
மருந்துப்பொடி - 1 ஸ்பூன்

தாளிக்க :
சின்னவெங்காயம் - பொடியாக நறுக்கியது 2
கறிவேப்பிலை - சிறிது





வறுத்து அரைக்க
கொத்தமல்லி - 2 ஸ்பூன்
மிளகு - ஒரு பெரிய ஸ்பூன்
சீரகம்- ஒரு சின்ன ஸ்பூன்
பூண்டு - 4 பல்
சின்னவெங்காயம் - 4
மிளகாய் வற்றல் - 2
                        கறிவேப்பிலை - கொஞ்சம்


வெறும் வாணலில் கறிவேப்பிலையை வறுக்கவும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மேற்கூறியவற்றை வறுத்து தண்ணீர் விட்டு நைசாக  அரைக்கவும்.


செய்முறை

சூப் செய்யும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சின்னவெங்காயம் போட்டு தாளிக்கவும்,
அதில் அரைத்த விழுதை தேவையான அளவு தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
5 நிமிடத்திற்குப்பிறகு பருப்புத்தண்ணீர் சேர்த்து, மருந்துப்பொடி கலக்கவும். மறுபடியும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சுத்தம் செய்த முருங்கைக்கீரையையும் உப்பும் சேர்த்து ஒரே ஒரு கொதி விடவும்.


கவனிக்க

1.மருந்துப்பொடி என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிலபல மருந்துப்பொருட்களின் கலவை. அதில் திப்பிலி, மிளகு, வால்மிளகு,  பெருஞ்சீரகம், சுக்கு, இன்னும் பல வகையான மருந்துப்பொருட்கள் இருக்கும்.  இது இல்லாமலும் செய்யலாம். ஆனால் இந்த மருந்து பொடியை போடுவதால் சளி, உடல் சோர்வு, தலைசுத்தல், பிரட்டல் போகும்.
2. முருங்கைக்கீரை அதிக நேரம் வேகவைக்கக்கூடாது..


புதன், ஜூன் 01, 2011

இட்லி - ஒரிஜினல்

சின்ன வயதில் எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாட்டி இருப்பாங்க, பேரு இட்லிக்கார ஆத்தா,  தண்ணியில் தேடும் சாம்பாரும், வெள்ளைகலர் தேங்காய் சட்னியும் சேர்த்து தினம் காலை 6 மணி முதல் இட்லி கிடைக்கும். அவர் இட்லி பாத்திரத்தில் துணி போட்டு ஊத்தும் அழகும் எடுத்து கொட்டி அடுக்கும் அழகும் பார்த்துட்டே இருக்கலாம். அதற்கு பிறகு அவ்வளவு மிருதுவான சுவையான இட்லி ரொம்ப குறைந்த இடங்களில் மட்டுமே சாப்பிட்டிருக்கேன்.

இட்லி நிறைய்ய வகைகளில் செய்யலாம், பாரம்பரிய முறை, மேலும் 3 வகைகளில் செய்யலாம். எதுவா இருந்தாலும் சூடாக இருக்கும் போது சாப்பிட்டால் மட்டுமே சுவை.

இன்னைக்கு பாரம்பரிய இட்லி. 

தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 4 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரிசியும் வெந்தயத்தையும் ஒன்றாக 2 மணி நேரம் (மட்டும்) ஊற வைக்கவும். உளுந்தை அரை மணி நேரம் மட்டும் ஊற வைக்கவும். முதலில் கல்லில் உளுந்தை சரியா 20 நிமிடம் மட்டும் ஆட்டி எடுக்கவும், அதிக தண்ணீர் ஊற்றாமல், நீர்த்து போகவிடாமல் சரியான பதத்தில் எடுக்கவும். அரிசியும் வெந்தயமும் ஆட்டி உளுந்துடன் கலந்து ஒரு 8 மணி நேரம் மட்டும் புளிக்க விடவும்.

எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளை விட துணி போட்டு ஊற்றும் பழைய முறை நல்லது. இட்லி ஒரு நல்ல டயட் உணவு, அதில் எண்ணைய் கலந்து அதையும் கெடுக்க வேண்டாமே.

வெள்ளைத்துணியில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

இட்லிக்கெல்லாம் ஒரு பதிவான்னு கேட்ககூடாது. இட்லி சுடத்தெரியாதோர் நாட்டில் பலர் உள்ளனர்.



செவ்வாய், ஜனவரி 04, 2011

மைக் டெஸ்டிங் :))

எதோ ஒரளவுக்கு சுமாரா சமைப்பேன். என்னது சாட்சி வேணுமா?  ம்ம்க்கும் கல்யாணத்தின் போது ராம் சிலேட்டு பென்சில் மாதிரி இருந்தாரு, இப்ப எப்படி கொலுவில் வைக்கும் செட்டியார் சைசுக்கு இருக்கார்.. எல்லாம் எப்படி? அம்மினி கை வண்ணம் தான்..

சைவம், சில முட்டை சமையல் குறிப்புக்கள் அதுவும் கோயமுத்தூர் பாரம்பரிய உணவுகுறிப்புக்களுடன் வரும். ராமோட பாட்டி, பக்கத்து வீட்டு கற்பகம் மாமி, ஜெயந்தி மாமி, ஷோபனா அத்தை, என் அருமை தங்காச்சி, சில ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு குரு வணக்கம் சொல்லி ஆரம்பிக்கறேன்..